
"பறத்தல் உன் சுதந்திரம் அன்று" என்று எந்த ஒரு பறவைக்கும் கட்டம் கட்டி விட
முடியாது. ஆனால் தனக்காக ஒதுக்கப் பட்ட சிறு வட்டத்தைத் தாண்டி, தனது எல்லைகளை
விரிவுபடுத்த வேண்டும் என்று, வெறும் நடிகனாய் மட்டுமே தான் அறியப் பட்டு விடக்
கூடாது என்று, தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்க, தன் சுயம் தேடி, தன்
கனவுகளை தேடி, ஒரு பைக்/கார் ரேசராகவும் வாழ முயற்சித்த ஒரு தன்னம்பிக்கை
நிறைந்த மனிதனாய் அஜீத் எனும் கலைஞனை எனக்கு ஓரளவு பிடிக்கும். (இதற்கு
அர்த்தம் அஜீத் ரசிகன் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு நான்
பொறுப்பல்ல.)
வெகு சில பேட்டிகள் மட்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படும் போது அது
எவ்வளவு நேரம் ஆனாலும், நம்மை இன்னும் அதில் கட்டிப் போட்டு
வைத்திருக்கும். நமக்கு
மிகப் பிடித்த எழுத்தாளரின் பேட்டியோ அல்லது கமல் போன்ற ஒரு சில கலைஞர்களின்
பேட்டியோ, அல்லது குஜராத் கலவரம், அணுசக்தி ஒப்பந்தம், நந்திகிராம் போன்ற சூடான
விஷயங்களைப் பற்றிய சம்பந்தப் பட்ட தலைவர்களின் பேட்டிகளோ ஒளிபரப்பாகும் போது
ஒரு வார்த்தைகளை கூட விட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்(பேன்).
அப்படி என்னைக் கவர்ந்த ஒரு பேட்டியாக நேற்று இரவு கலைஞர் டீவியில் இடம் பெற்ற
"அன்புடன் அஜீத்" பேட்டியைச் சொல்லலாம். கமலின் பேட்டிகளை விரும்பி
பார்ப்பவர்களுக்கு ஒரு சில விஷயம் தெரியும். கமல் முடியும் வரை தூய தமிழில்தான்
பேசுவார். அதை விட முக்கியமான ஒன்று சரியான வார்த்தைகளுக்கு அவர் அவ்வளவு
முக்கியத்துவம் தருவார். "இது சந்தோசப் பட வேண்டிய விஷயமல்ல். பெருமைப் பட
வேண்டிய விஷயம்" என்பது போன்று கூர்ந்து கவனித்து புலப்படுத்திக் கொள்ள
வேண்டுமளவுக்கு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
அதே போன்று தான் சொல்லும் எந்த ஒரு வார்த்தைகளும் தவறாக புரிந்துக் கொள்ளப்
படக் கூடாது என்பதில் உறுதியாக தனது ஒவ்வொரு வார்த்தைகளையும் அவ்வளவு தெளிவாக
விட்டுக் கொண்டிருந்தார் அஜீத்.இது நாள் வரை எந்த ஒரு டீவியிலும் பேட்டிகள்
என்று மைக் முன்பு பேசியிராத ஒரு நடிகன் என்னதான் பேசுவார் என்று பார்ப்போமே
என்று சற்றே அசுவாராசியமாய்த்தான் இந்த பேட்டியை பார்க்க ஆரம்பித்தேன். நேரம்
செல்லச் செல்ல இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவார் பார்ப்போமே, அதற்கு என்ன
சொல்லுவார் பார்ப்போமே, என்று என்னையறியாமல் அஜீத் பேசிய விதம் இந்த முழுப்
பேட்டியையும் அசைய விடாமல் பார்க்க வைத்து விட்டது.
தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தும் சில கேள்விகளுக்கு ரொம்ப
உண்மையாக பேசிய விதம் நிஜமாலுமே ரொம்ப கவர்ந்து விட்டது. இப்படி ஒரு மேல்
பூச்சு இல்லாத பேச்சை ரொம்ப நாள் கழித்து கேட்பதால் கூட இருக்கலாம்.
*"**எனது பட ரிலீஸின் போது சில சமயம் ரசிகர்கள் நடந்துக் கொள்ளும் விதம்
உண்மையிலேயே எனக்கே ஆச்சர்யாமாய் இருக்கும். இந்தளவுக்கு நான் தகுதியானவன் அல்ல.
ஏன்னா நான் ஒண்ணும் தொடர்ச்சியா ஹிட் படங்களையே கொடுத்திட்டிருக்கிறவன் இல்லை. பல
தோல்விப் படங்களைக் கொடுத்தவன்தான் நான்".*இந்த வார்த்தைகள் எனது மனதில்
இருந்ததை அப்படியே சொன்னது போல் இருந்தது. கவனிக்க வேண்டிய ஒன்று தன்னை உணர்ந்த
ஒருத்தரால்தான் இத்தகைய வார்த்தைகளைச் சொல்ல முடியும்.*"*
*எனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நான் ப்ரைவசியை தேட ஆரம்பித்து விட்டேன்**".
* இந்த ஆடம்பர, லைம்லைட் தரும் புகழைத் தேடி எல்லாரும் ஓடிக்
கொண்டிருக்க, எனக்கென்று
ஒரு தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும் என்று காம்ப்ரமைஸ் ஆகாமல் சொன்னதை வாழ்வின்
ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்க விரும்பும் ஒருவனால் புரிந்துக் கொள்ள முடியும்
என்று நினைக்கிறேன்.
*"I wont say i was misquoted. I was misunderstood".* எந்த ஒரு
துறையிலிருக்கும் ஒருவனுக்கும் தனது துறையில் முதலிடத்தில் வர வேண்டும் எனும்
ஆசை இருக்கும். அப்படி ஆசை இல்லாதவனின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே
இருக்காது. அந்த வகையில் எனது துறையில் முன்னேற நான் சூப்பர் ஸ்டார் ஆக
வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அது தவறில்லை. அது தவறாக புரிந்துக்
கொள்ளப்பட்டு மிகவும் விமர்சனப் படுத்தப் பட்டது என்று பழைய விஷயங்களைப் பற்றி அதே
ஈகோவுடன் இன்னும் அதே திமிருடன் சொன்னது மிகவும் கவர்ந்தது.
என்னடா இவ்வளவு நல்லா பேசறாரு, இவரும் எல்லா சினிமா ஆளுங்க மாதிரியும் "When i
was in London, Paris,……." அப்படீங்கிற ரேஞ்சுக்கு ஒரே பீட்டரா
பேசிக்க்கிட்டிருக்காரு. கொஞசம் ஓவரு சீன் விடறாரோன்னு நினைத்துக் கொண்டிருந்த
போது அவர் சொன்னது என்னுடைய மொழியே ஆங்கிலம்தான். தமிழ் கொஞ்சம் உடைந்து
உடைந்துதான் பேச வரும். அதனால் நான் சொல்ல வருவதை என்னால் முழுதாய் சொல்ல
முடியாது. அதனால்தான் நான் பேட்டி கொடுக்கவும் எப்பவும் சற்று தயங்குகிறேன்
என்று சொல்லி என் அந்த யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
*"**நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன். உண்மைதான். ஆனால் அதை வெளியில
சொல்லிக்கிட்டு அனுதாபம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன்னா இங்கே தனது
சுய உழைப்பாலே முன்னேறியவர்கள் என்னைத் தவிர எக்கச் சக்கமானோர்
இருக்கின்றனர். அவர்கள்
எல்லாம் என்ன சொல்லிக் கொண்டா இருக்கிறார்கள் என்று அவர் கேட்டது**"* ஒரு சபாஷ்
போட வைத்தது.
*"**நீங்கள் பல புதிய டைரக்டர்களுக்கு ப்ரேக் கொடுத்திருக்கிறீர்கள். ஏன்
அவர்களுடன் திரும்ப பண்ணக் கூடாது என்று கேட்டதற்கு, டைம் அமையலைங்க. அது
மட்டுமில்லாமல் நான் ஒண்ணும் ப்ரேக் எல்லாம் கொடுக்கலை. அந்த சமயத்தில் நாங்க
எல்லாம் ஒண்ணாதான் ஒரே லெவல்லதான் இருந்தோம். இது எனது சாதனை கிடையாது அவர்கள்
எனக்கு வெற்றிப்படம் தந்தார்கள். அதன் மூலம் நாங்க எல்லாம் வளர்ந்தோம். இப்போ
நானும் பிஸி. அவங்களும் பிஸி"*ன்னு சொன்னப்போ, அடப் பாவி நடிகன்ங்கிற பந்தா
கொஞ்சம் கூட இல்லாம இருக்கிறியே, இப்படி இருந்தா எல்லாம் பொழைக்க முடியாதுப்பா
என்றுதான் தோன்றியது.
சமூக சேவை பற்றி கேட்டதற்கு, ஆரம்பத்தில் எக்ஸ்னோரா இயக்கத்துடன் சேர்ந்து
பசுமை புரட்சித் திட்டமாக, மரம் நடுவ்து குறித்தான தனது விழிப்புணர்வு பிரச்சர
முயற்சிகளை கொஞ்சம் சொல்லி விட்டு, அதற்கப்புறம் சொன்னார். *"**ஒரு லெவலுக்கு
மேலே என்னால முடியலைங்க. ஏனா எங்கே போனாலும் கூட்டம் சேர்ந்துடுது. அது மட்டும்
இல்லாமல் ஒரு லெவலுக்கு மேல நாம சமூக விழிப்புணர்வு குறித்தும், ஏதேனும்
விஷயங்களைப் பற்றி தனிப்பட்ட ஒருவனாக ஏதேனும் கருத்து சொன்னால், உடனே இவன்
அரசியலுக்கு வர அஸ்திவாரம் போடறான்.அது இதுன்னு நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து
விடுகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நீ ஒரு நடிகன் நடிக்கிறதைத் தவிர வேற
எதைப் பத்தியும் பேச கூடாது, பேச உரிமையும் இல்லைன்னு சொல்றாங்க" *எனும்
ரீதியில் அவர் சொன்ன பதில் ரொம்ப நாளா ராமதாஸ் பரபரப்புக்காக வேண்டுமென்றே
விடும் சில அறிக்கைகளைப் பார்த்து நான் அடைந்த எரிச்சலை நினைவூட்டியது.
தேவையில்லாத வம்புகள் வேண்டாம் என்று அவர் சொல்லாமல் விட்ட விஷயம் "நான் கடவுள்"
பட விவகாரம் சம்பந்தமாக பாலா, சீமான் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களும்
சேர்ந்து பாம்க்ரோவ் ஹோட்டலில் கூப்பிட்டு அவரை மிரட்டியது. அந்த சம்பவம்
குறித்து பேசும் போதெல்லாம் அவர் எவ்வளவு பாதிக்கப் பட்டிருந்திருக்கிறார்
என்பதை அவரது செய்கைகளில் பார்க்க முடிந்தது. உதவி இயக்குனர்களாக வாய்ப்பு
தேடிக் கொண்டிருக்கும் ஒரு சில நண்பர்களின் மூலம் அது சமயத்தில் என்ன நடந்தது
என்ற விவரங்களை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன்.அந்த ஒரு படத்திற்காக ஏறக்குறைய
இரண்டு வருடம் காத்திருந்து, உடல் மெலியச் செய்து, வேறு படங்களே நடிக்காமல்
காத்திருக்க, அவரு படத்தில நடி, இவரு படத்தில நடி, அப்போதான் நான் உன்னை வெச்சு
எடுப்பேன் என்ற ரீதியிலும் இன்னும் வேறு வகையிலும் பாலா தொல்லைகள் கொடுக்க
ஆரம்பிக்க, உன் சங்காத்தமே வேண்டாம் என்று வாங்கின பணத்தைக் கொடுக்க முயல
அவ்வளவு பெரிய தொகைக்கும் இரண்டு வருட வட்டி வேண்டும் என்று ஆள் வைத்து மிக
மோசமான முறையில் மிரட்டி இருக்கிறார்கள் பாலா கூட்டணியினர். இதில் சீமானும்
அடக்கம் என்று கேள்வி.
(இவை யாவும் நண்பர்களின் மூலம் கேள்விப்பட்டது. எனக்குத் தெரிந்து கொஞ்சம்
தவறான தகவால்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை உண்மையே)
இந்த கீழ்த்தரமான செயலால் ரொம்பவே வேதனப் பட்டிருதார் என்பதை அவரது வார்த்தைகள்
மெய்ப்பித்தன. *அந்த சமயத்தில் எனக்காக குரல் கொடுத்தது மீடியாக்களும் என்
ரசிகர்களும்தான். அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் அந்த
சமயத்தில் நான் என்ன செய்வது? நான் என்ன என்று சொல்வது? அப்படியே ஏதேனும்
சொல்லி இருந்தாலும் புலம்பறான் பாரு என்றோ, என்னய்யா எதைக் கேட்டாலும் அதுக்கு
ஒரு எக்ஸ்கியூஸ் சொல்றான், 1008 சாக்கு சொல்றான் என்றோ தான் சொல்லி
இருப்பார்கள்**." *
*"**எனது ரசிகர்களிடம் நான் பேச, மீடியாவில் பேட்டி கொடுக்க எனக்கென்று ஒரு
வலிமையான காரணம் தேவைப் பட்டது. அது இப்போது பில்லா வடிவில்
வந்திருக்கிறது. அதனால்தான்
நான் இப்போது பேசுகிறேன். அதை விட்டு சும்மா எதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு
டீவியில வந்து மூஞ்சி காமிச்சுட்டு இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை**." *"
எனது படங்கள் சமூகத்திற்கு அறிவுரை சொல்லியோ, கருத்துக்கள் சொல்லியோ வருகிறதோ
இல்லையோ, நிச்சயமாய் சமூகத்தை கெடுக்கும் வண்ணம் வராது என்பதில் நான் உறுதியாய்
இருக்கிறேன்."
"தீனாவை விட எனக்கு முகவரி, கிரீடம் போன்ற படங்கள்தான் மிகவும் பிடித்திருந்தன"
என்பது போன்ற ஒரு சில மனம் திறந்த பேச்சுக்கள்தான் என்னை ஒரு வித
எதிர்பார்ப்போடு தொடர்ந்து பார்க்க வைத்தன.
எப்படிப் பார்த்தாலும் இந்த பேட்டி என்னை மட்டுமல்ல என்னுடன் சேர்ந்து பார்த்த
எனது நண்பர்கள் அனைவரையும் ரொம்பவே கவர்ந்து விட்டது. மனம் திறந்த பேட்டி என்று
சொல்லுவார்களே அது இதுதான் என்று சொல்லலாம்.
அப்படி என்ன இந்த பேட்டி சாதிச்சுடுச்சு? என்று கேட்டால் *ஒன்றுமில்லை*. 2 1/2 மணி
நேர பேட்டியில் நாட்டிற்கு கருத்து சொல்லுமளவிற்கோ, ஏதேனும் முக்கியப்
பிரச்சினைகளைப் பற்றிய சூடான விவாதங்களோ, புரட்சியை உண்டு பண்ணும் புதிய
சித்தாந்த தத்துவங்களோ எதுவும் இல்லை.நல்லதாய் ஒரு டைம் பாஸ் அவ்வளவுதான். என்னைக்
கேட்டால் "எனக்கு நடிக்கத் தெரியாதுங்க என்று அழுது கொண்டே சிம்பு அரங்கேற்றும்
நாடகங்களைப் பார்ப்பதற்கு இது எவ்வளவோ தேவையில்லை". அதே சமயம் போயும் போயும்
ஒரு நடிகனுடைய பேட்டியை இவ்வளாவு சிலாகித்து ஒரு பதிவு தேவையா என்று கேட்டால், ஒரு
எழுத்தாளன், ஒரு ஓவியன், ஒரு சிற்பி என எந்த ஒரு கலைஞனும் அடைய முடியாத
புகழை, லைம்லைட்
வெளிச்சத்தை ஒரு நடிகன் அடைகிறான் என்ற காரணத்திற்காகவும், அவன் சம்பாதிக்கும்
பணத்திற்காகவும் அவன் சற்று குறைவாக மதிப்பிடப்படுகிறானே ஒழிய நடிகனும் ஒரு
கலைஞன்தான்.சினிமா கலைஞர்களும் மதிக்கப் பட வேண்டியவர்கள்தான்.இதில் பாமரத்தனம்
எதுவும் இல்லை.